கனடாவில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 500 டொலர் பரிசாக அறிவித்த மர்ம தம்பதி
கனடாவில் மத்திய ஒகனகன் பகுதியை சேர்ந்த அனைத்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் 500 டொலர் பரிசாக அறிவித்துள்ளது ஒரு மர்ம தம்பதி.
மத்திய ஒகனகன் பகுதியில் உள்ள பள்ளி மாவட்டம் 23ல் அனைத்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் 500 டொலர் பரிசளிக்க ஒரு தம்பதி முடிவு செய்துள்ளது.
பள்ளி மாவட்டம் 23ல் சுமார் 2000 மாணவர்கள் உள்ளனர். இந்த 500 டொலர் பரிசானது அவர்களுக்கு கண்டிப்பாக பேருதவியாக இருக்கும் என Ryan Stierman என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த பணத்தை Lance மற்றும் Tammy என்ற பெயரில் ஒரு மர்ம தம்பதி நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளனர். வியாழக்கிழமையே மாணவர்களுக்கு இந்த நன்கொடை தொடர்பில் கடிதம்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை உரிய முறையில் செலவிடவும் அந்த தம்பதி கோரிக்கை வைத்துள்ளது. சுமார் 1,000,000 டொலர் அளவுக்கு நன்கொடையாக அளித்துள்ள அந்த தம்பதி தொடர்பில் யாருக்கும் எந்த தகவலும் இல்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், அந்த தம்பதி கேட்டுக்கொண்டுள்ளபடியால் ரகசியம் காக்கப்படுவதாக பள்ளி மாவட்டம் 23ல் செயலாளர்-பொருளாளர் என செயல்பட்டுவரும் Ryan Stierman குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 500 டொலர் நன்கொடை பெறுவதற்காக 12ம் வகுப்பு மாணவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 23ம் திகதி உள்ளூர் நேரப்படி இரவு 11.59 மணி வரையில் பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.