கனடாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்: பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை!
கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 44 வயது நபரைத் தேடி வரும் ரிச்சிபுக்டோ கனடிய காவல் துறை, அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.
சென் மார்கிரட்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் சிட்னி கேபிள் என்பவர், கடந்த ஜூலை 27 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறியது தவிர, துப்பாக்கி தொடர்பான பின்வரும் குற்றச்சாட்டுகளுக்காகவும் அவர் தேடப்பட்டு வருகிறார்.

வாகனத்தில் சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்தது, உரிய அனுமதியின்றி துப்பாக்கியை வைத்திருந்தது, துப்பாக்கியைப் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைத்திருந்தது.
ஜஸ்டின் சிட்னி கேபிளை எங்காவது கண்டால் பொதுமக்கள் யாரும் அவரை நேரடியாக அணுகக் கூடாது என்றும், உடனடியாக 911 என்ற அவசர எண்ணிற்கு அழைக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவர் இருக்குமிடம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், ரிச்சிபுக்டோ காவல் துறையை 506-523-4611 என்ற எண்ணிலோ அல்லது குற்றத் தடுப்புப் பிரிவை 1-800-222-8477 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.