போரின் போது ரகசியமாக அமீரகம் சென்று திரும்பிய பெஞ்சமின் நெதன்யாகு? வெளியான தகவல்
ஈரானுடனான போரின் போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருடன் "ரகசிய" சந்திப்பை நடத்தினார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
'சிங்கத்தின் கர்ஜனை' நடவடிக்கையின் போது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரகசிய பயணம் மேற்கொண்டார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு அவர், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தார் என்று அவரது அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஈரானுடனான போரின்போது, இஸ்ரேல் தனது அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அவற்றை இயக்குவதற்கான பணியாளர்களையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பியதாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீ அறிவித்த ஒரு நாள் கழித்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹக்கபியின் கருத்துக்களை நேரடியாக உறுதிப்படுத்தாவிட்டாலும், இந்த பயணம் "இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான உறவுகளில் ஒரு வரலாற்று திருப்புமுனையை குறிக்கிறது" என்று நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்தது.