நவம்பர் முதல் புதிய வரி ; டிரம்ப் அறிவிப்பால் உலகநாடுகள் அதிர்ச்சி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் 1 ஆம் தேதி முதல் 25 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளமை உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 25 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் இந்தப் புதிய வரி விதிப்பை உறுதி செய்துள்ளார். இது அதிகளவில் லாரிகளை ஏற்றுமதி செய்யும் ஐரோப்பிய நாடுகளைக் கடுமையாக பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதேசமயம், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட உள்நாட்டு நிறுவனங்களான பீட்டர்பில்ட், கென்வொர்த், டெய்ம்லர் டிரக் போன்ற நிறுவனங்கள் இதனால் பயனடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது லாரிகளுக்கான வரி உயர்வு, அமெரிக்காவின் உள்நாட்டு வாகன தொழிலைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை என்று கூறப்படுகிறது.