ஈரான் மீது அமெரிக்காவின் புதிய தாக்குதல் ; விமான நிலையம் குறிவைப்பு
ஈரானின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இரான்ஷாஹர் நகரின் விமான நிலைய வசதிகளை குறிவைத்து அமெரிக்கா வியாழக்கிழமை (09) அதிகாலை நடத்திய தாக்குதலில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரான்ஷாஹர் நகர ஆளுநர் சலீம் கட்கோடா வெளியிட்ட தகவலின்படி, விமான நிலைய வளாகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, இரான்ஷாஹர் விமான நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.

அதேவேளை, சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள இரான்ஷாஹர் நகரில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஈரானில் உள்ள பல்வேறு இடங்களை குறிவைத்து அமெரிக்கா புதன்கிழமை பிற்பகல் மேற்கொண்ட தொடர் வான் தாக்குதல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஈரானின் இராணுவத் திறனைக் குறைக்கும் நோக்கில் கூடுதல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சமீபத்திய இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளதுடன், நிலைமையை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.