அன்னையர் தினத்தில் கனேடியப் பெண்ணின் கொடுஞ்செயல்
கனடாவில் தாயாரை தாக்கி, பிறந்து 8 நாட்களேயான பிஞ்சு குழந்தையை கடத்திய வழக்கில் பெண் ஒருவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒட்டாவா நகரில் கடந்த அன்னையர் தினத்தன்று குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. Shawville பகுதியை சேர்ந்த நிக்கோல் ஷாங்க்ஸ் என்பவரே குறித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது, பிஞ்சு குழந்தையை கடத்துதல், ஆயுதத்தால் தாக்குதல், ஆயுதம் வைத்திருத்தல் சட்டத்திற்கு புறம்பான துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட வழக்குகளில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மீதான இறுதித்தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த மே மாதம் புதிதாக தாயாகவிருக்கும் பெண்களுக்கான பேஸ்புக் குழு ஒன்றில் இருந்து பெண் ஒருவருடன் ஷங்க்ஸ் நட்பாகியுள்ளார்.
இருவரும் மே 7ம் திகதி சந்தித்துள்ளதுடன், பிறக்கவிருக்கும் குழந்தைக்கான உடுப்புகளும் பரிசு கூப்பன்கள் சிலவற்றையும் அந்த தாயாருக்கு அளித்துள்ளார் ஷாங்க்ஸ்.
இந்த நிலையில் ஒருமுறை, குறித்த தாயாரை தொடர்பு கொண்ட ஷாங்க்ஸ், தாம் கர்ப்பிணியாக இருப்பதாகவும், அறுவைசிகிச்சை மூலம் மகப்பேறு நடக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, மே 9ம் திகதி குறித்த தாயாருக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ள ஷாங்க்ஸ் அதில், காலை உணவை அனுப்பி வைத்துள்ளதாகவும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தியுள்ளார்.
பின்னர், காலை உணவை தாமே எடுத்து வர இருப்பதாகவும் ஷாங்க்ஸ் அந்த தாயாரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து, அந்த தாயாரின் குடியிருப்புக்கு சென்ற ஷாங்க்ஸ், உள்ளே நுழைந்ததும் குறித்த தாயாரின் முகத்திலும் உடலிலும் கரடி ஸ்ப்ரேயை தெளித்துள்ளார்.
இதில் கலவரமடைந்த அந்த தாயாரிடம் இருந்து குழந்தையை ஷாங்க்ஸ் பறித்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்ப முயன்ற நிலையில் அப்பகுதி மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு வந்த பொலிசார் ஷாங்க்ஸை கைது செய்துள்ளனர். மேலும், ஷாங்க்ஸ் சில நாட்களாக அந்த குடியிருப்பை நோட்டமிட்டதாகவும், அந்த குடியிருப்பை கண்காணித்து வந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
அன்னையர் தினத்தன்றே இளம் தாயார் ஒருவரை தாக்கியதும், குழந்தையை பறிக்க முயன்றதும் ஷாங்க்ஸ் என்பவரை குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்க வைத்துள்ளது.