புலம்பெயர்ந்தோர் இல்லாவிட்டால் எங்கள் தொழில் அவ்வளவுதான்: கனேடிய மாகாணம் ஒன்றின் செய்தி
வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள உள்ளூர் சமூகத் தலைவர்கள், புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் தங்கள் வணிகத்தை அச்சுறுத்துவதாகக் கூறி, தொழிலாளர் நெருக்கடியைத் தீர்க்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசைக் கோரியுள்ளார்கள்.
கனடாவின் மூன்றாவது பெரிய துறைமுகம் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பிரின்ஸ் ரூபர்ட் நகரில்தான் உள்ளது.
ஆனால், புலம்பெயர்தல் மற்றும் பணி அனுமதி கொள்கைகளில் கனடா அரசு மேற்கொண்ட மாற்றங்களால், 14,000 பேர் வசிக்கும் அந்நகரத்தின் உள்ளூர் பொருளாதாரம் ஆபத்தில் உள்ளது என்கிறார் Community Futures Development Corporation என்னும் அமைப்பின் நிர்வாக இயக்குனரான ஜான் ஃபாரெல்.
அரசின் இரண்டு கட்டுப்பாடுகளால் தங்கள் நகர தொழில்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அவர்.
ஒன்று, தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டம் (TFW). இரண்டு சர்வதேச மாணவர்கள் மீதான கட்டுப்பாடுகள்.
அதாவது, தனது உணவகத்தின் 90 சதவீத பணியாளர்களும் இந்த திட்டங்கள் மூலமாகத்தான் தன்னிடம் பணியாற்றுவதாக தெரிவிக்கும் ஜான், அரசு இந்த தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டம் மற்றும் சர்வதேச மாணவர்கள் மீது விதித்த கட்டுப்பாடுகளால் தங்கள் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
அவரைப்போலவே வேலைக்கு இந்த தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களை நம்பியிருக்கும் மற்ற வணிக உரிமையாளர்களும், எங்கள் வணிகம் ஒரே இரவில் மறைந்துவிடும், எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் அவர்களுக்குத் தேவையான சேவையை வழங்கத் தேவையான ஆட்கள் இல்லையென்றால் ஏமாற்றமடைவார்கள் என்கிறார்கள்.
அரசு இந்தக் கொள்கைகள் தொடர்பில் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், உண்மையில் எங்கள் நகரம் நிலைகுலைந்துவிடும் என எச்சரிக்கிறார் ஜான்.
ஆகவே, புலம்பெயர்தல் மற்றும் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டம் ஆகிய கொள்கைகளின் தாக்கத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்வதாகவும், அது தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு முறைப்படி கோரிக்கை அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.