அணு ஆயுத கப்பல்கள்: ரஷ்யா தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நோர்வே
ரஷ்யா கடந்த 30 ஆண்டுகளில், முதன்முறையாக அணு ஆயுத போர் கப்பலை ஆர்க்டிக் கடல் எல்லையில் நிலைநிறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ள நிலையில், ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராட கூடுதலான ஆயுதங்கள் வேண்டும் என மேற்கத்திய நாடுகளிடம் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.
இதேவேளை, போர் ஆரம்பித்து ஓராண்டு நிறைவடையுள்ள காலத்தில், உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து, மீண்டும் ஒரு புதிய முழுநீள தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தயாராகி வருகிறார்.
இதற்காக இரு நாட்டு எல்லைகளிலும் 5,00,000 என்ற அளவிலான இராணுவ துருப்புகளை புடின் களமிறக்கி இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஆர்க்டிக் பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய போர்க்கப்பல்களை ரஷ்யா நிலை நிறுத்தியுள்ளதாக புதிய உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
மேற்கு நாடுகளை எச்சரிக்கும் வகையில் அலாஸ்காவிற்கு அருகே ரஷ்யா தனது இரண்டு Tu-95 பியர் அணு குண்டு வீச்சை அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக நோர்வே உளவுத்துறை அறிக்கை குறிப்பிட்டுள்ள தகவலில்,
"அணுசக்தி ஆற்றலின் முக்கிய பகுதியான நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் அணு ஆயுத கப்பல்கள் வடக்கு கடற்படையில் ரஷ்யா நிலைநிறுத்தப்பட்டுள்ளது“ என தெரிவித்துள்ளது.
உக்ரைனில் போர் ஆரம்பத்திடல் இருந்து ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களின் முக்கியத்துவம் கணிசமாக அதிகரித்துள்ளது.
பனிப்போரின் போது வடக்கு கடற்கரையில் முன்னாள் சோவியத் யூனியனின் கப்பல்கள் வழக்கமாக அணு குண்டுகளுடன் கடலுக்குச் சென்றன.
ஆனால் நவீன ரஷ்யா உருவான பிறகு அணு ஆயுத கப்பல்கள் வடக்கு கடற்கரை பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.