சகதியில் சிக்கி இரவு முழுவதும் தவித்த முதியவர்; ஐந்தறிவு ஜீவன் செய்த செயல்
சுவிட்சர்லாந்தில் 80 வயது முதியவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக சகதியில் சிக்கி இரவு முழுவதும் தத்தளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அன்று மாலை 5.30 மணி அளவில் சுவிட்சர்லாந்தில் உள்ள Stein am Rhein என்ற நகர் வழியாக வாகனத்தில் வந்த முதியவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக அங்குள்ள சகதி ஒன்றில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் அங்கு உதவிக்கு யாரும் இல்லாத காரணத்தினால் மறுநாள் காலை 8.30 மணி வரை சகதிக்குள்ளேயே தத்தளித்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அந்த வழியாக ஒருவர் நாயுடன் நடந்து வந்தபோது சகதியில் சிக்கிய வாகனம் அருகே வந்தவுடன் நாய் குரைக்க ஆரம்பித்துள்ளது.
இதனால் வாகனத்தின் அருகே உற்றுநோக்கிய அவர் அங்கு சகதியில் தத்தளித்துக் கொண்டிருந்த முதியவரை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவசரமாக் அந்த நபர் இது குறித்து மீட்பு குழுவுக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் அந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.