8 ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணத்தடை விதித்த அமெரிக்கா
உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய கொரோனா மாறுபாடான Omicron தொற்று காரணமாக 8 ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணத்தடை விதித்துள்ளது அமெரிக்கா.
குறித்த தடையானது திங்கட்கிழமை முதல் அமுலுக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் பொஸ்வானா நாட்டில் முதன்முறையாக கண்டறியப்பட்ட இந்த Omicron கொரோனா மாறுபாடானது, இந்தியாவில் முன்னர் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடைவிடவும் பலமடங்கு வீரியம் கொண்டது என விஞ்ஞானிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐரோப்பா, அமெரிக்க, ஆசிய நாடுகள் துரித நடவடிக்கை முன்னெடுத்து வருகிறது. 8 ஆப்ரிக்க நாடுகளான தென்னாப்ரிக்கா, பொஸ்வானா, ஜிம்பாப்வே, நமீபியா, லெசோதோ, ஈஸ்வதினி, மொசாம்பிக், மலாவி உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானப் பயணிகளுக்கு தடைவிதித்துள்ளது அமெரிக்கா.
இருப்பினும் அமெரிக்க குடிமக்கள், நிரந்தர வதிவிட உரிமம் பெற்றவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியும், ஆனால் எஞ்சியவர்கள் எவரையும் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என அமெரிக்க நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
குறித்த புதிய மாறுபாடுக்கு Omicron என பெயர் வைத்துள்ள உலக சுகாதார அமைப்பு, கவலைக்குரியது என உத்தியோகப்பூர்வமாக வகைப்படுத்தியுள்ளது. பிரித்தானியா அரசு ஏற்கனவே குறிப்பிட்ட ஆபிரிக்க நாடுகளில் இருந்து விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளும் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அமெரிக்காவை பொறுத்தமட்டில், 40 சதவீத மக்கள் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மேலும், ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் புதிய மாறுபாடுக்கு ஏற்றார்போல் தங்கள் தடுப்பூசிகளிலும் மாறுதல்களை ஏற்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.