உக்ரைன் மீது தொடர் வான்வழித் தாக்குதல் ; ஜெலென்ஸ்கி வெளியிட்ட தகவல்
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள தொடர் வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (01) தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பமான நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

நேற்று (31) நள்ளிரவு முதல் இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மக்களுக்கு அழிவை ஏற்படுத்தும் வகையிலான கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், 300க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.