இலங்கையில் பிறந்து 8 நாட்களேயான சிசுவுடன் வீதியில் தவித்த பெற்றோர்; இராணுவத்தின் நெகிழ்ச்சியான செயல்
நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருந்த காலத்தில் கொழும்பு ஆமர் வீதி சந்தியில் பிறந்த எட்டு நாட்களேயான தமது கைக்குழந்தையுடன் பெற்றோர் போக்குவரத்துக்காக வீதியோரமாக நெடுநேரமாக காத்துக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மருதானை பக்கமாகவே சென்றுகொண்டிருந்த நான், ஆமர் வீதி சந்திக்குச் செல்லும் பக்கமாக நின்று கொண்டிருந்த அவர்கள் பக்கத்துக்கு வந்து, அவர்களுடன் உரையாட முயற்சித்தபோது இராணுவ வாகனம் ஒன்று அவர்கள் அருகே வந்து நின்றது. அதிலிருந்த மூன்று இளம் இராணுவ சிப்பாய்கள் கீழே இறங்கி அவர்களுடன் பேச ஆரம்பித்தனர்.
இதன்போது அந்த இளம் தம்பதிகளின் ஊர் நிட்டம்புவ என்றும், அவர்கள் தங்கள் வீட்டுக்குச் செல்வதற்கு வாகனம் ஒன்றுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தனர். மிகவும் கவலையுடன் காணப்பட்ட அவர்களை பார்ப்பதற்கே பரிதாபமாக, அதுவும் அந்த பிஞ்சுக் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தமை வேதனையாகவிருந்தது.
நீங்கள் கொழும்பு வந்ததற்கான காரணம் என்ன? எப்படி வந்தீர்கள் என அவர்களிடம் கேட்டதற்கு, எமது குழந்தையின் தொப்புள் கொடியை அகற்றும் சிகிச்சைக்காக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு (நோனா வார்ட்) எமது ஊரிலிருந்து அம்பியூலன்ஸ் வண்டி மூலமாக வந்தோம். சிகிச்சை முடிந்து ஊர் செல்வதற்கு முடியாது தவித்திருந்தபோது, முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தான் மட்டக்குளி நோக்கி பயணிப்பதாகவும், ஆமர் வீதி சந்தியில் அதிகமான வாகனங்கள பயணிக்கும், அங்கிருந்து ஏதேனும் வாகனத்தில் உங்களது ஊருக்கு போக முடியும் என கூறி இந்த இடத்தில் (ஆமர் வீதி சந்தி) எங்களை இறக்கிவிட்டார் எனக் கூறினர்.
இந்த நிலையில், இவர்களுக்கு உதவி செய்யும் முகமாக குறித்த இராணுவ வீரர்கள் ஏதேனும் வாகனங்கள் அந்த வழியாக செல்லுமா என வீதியில் சென்ற வாகனங்களை நிறுத்திக் கேட்டனர். இவ்வாறு 10 நிமிடங்களுக்குப் பின்னர் , அந்தப் பக்கமாக கபில நிற சிறிய ரக லொறி ஒன்று வந்தது. வாகனத்தை வழிமறித்து அதிலிருந்த சாரதி மற்றும் உதவியாளரிடம் சம்பவத்தைக் கூறி உதவி கேட்டோம். அவர்கள் கட்டுநாயக்க பக்கமாக செல்வதாகவும், மினுவங்கொடையில் இறக்கி விடுகிறோம் என ஆரம்பத்தில் கூறியிருந்தபோதிலும், அந்த பிஞ்சுக் குழந்தையினதும், இளம் தாயின் நிலை அறிந்தும் அவர்களை நிட்டம்புவையிலுள்ள அவர்களின் வீட்டுக்கே சென்று இறக்கி விடுவதாக தெரிவித்தும், எமக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்தது.
அதோடு அந்த வாகனத்தில் சாரதி ஆசனமும் அதற்கு அருகாமையிலுள்ள முன்பக்க ஆசனமும் மாத்திரமுமே இருந்தன. இந்நிலையில், சாரதி ஆசனத்துக்கு அருகிலுள்ள ஆசனத்தில், தாயுடன் பிஞ்சுக் குழந்தையை ஏற்றிவிட்டு, வாகன உதவியாளர் , குழந்தையின் தந்தை இருவரும் பின்பக்கமாக ஏறி அமர்ந்து கொண்டனர். இதேவேளை அந்த இளம் பெற்றோருக்கு இராணுவ சிப்பாய்கள் பண உதவிகளை வழங்கியதுடன், அறிவுரைகளையும் கூறினர். இராணுவ சிப்பாய்களுக்கு கண்ணீர் கலந்த நன்றிகளை தெரிவித்ததுடன், அந்த லொறி அவ்விடத்தை சென்றதும், இராணுவ சிப்பாய்களும் தங்களது வாகனத்தில் ஏறி சென்றனர்.
இந்நிலையில் வீதியோர சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்த பெண்கள் இருவரும் , மேலதிக சில விடயங்களை எனக்கு கூறினர். அவர்கள் பிஞ்சுக் குழந்தையுடன் வாகனமொன்றுக்காக ரொம்ப நேரமாக காத்து நின்றனர். ஒரு வாகனம் கூட நிறுத்தவில்லை. பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. மிகவும் களைப்புற்ற அவர்கள் இங்கேதான் மதிய உணவையும் சாப்பிட்டனர். குழந்தையையும் எங்களுக்கு காட்டி, தொப்புக் கொடி அகற்றியமையை எங்களுக்கு காட்டினர். மிகுந்த கவலையடைந்த நாங்கள், எங்களால் முடிந்த பண உதவிகளை நாம் அவர்களுக்கு வழங்கினோம் என அந்தப் பெண்கள் இருவரும் மகிழ்ந்ததாக சம்பவம் தொடர்பில் அறிந்தவர் கூறியுள்ளார்.