மாஸ்க் அணியாமல் பேரணியில் ஈடுபட்ட அதிபருக்கு அபராதம்
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாவுக்கு(Jair Bolsonaro) அந்நாட்டு அரசு அபராதம் விதித்துள்ளது.
கொரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு இதுவரை 1 கோடியே 74 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில், சுமார் 4 லட்சத்து 87 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் (Jair Bolsonaro)அலட்சியப் போக்கே இந்த சுகாதார நெருக்கடிக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
அங்கு ஆரம்பத்தில் இருந்தே கொரோனா வைரசை சாதாரண காய்ச்சலுடன் ஒப்பிட்டுப் பேசி வரும் போல்சனாரோ, கொரோனா-வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவது, மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை அவசியமற்றவை என்று கூறி வருகிறார். இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் அவர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சா பவுலா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் மாஸ்க் அணியாமல் வாகன பேரணியில் ஈடுபட்டார்.
இதையடுத்து சா பவுலா மாகாணத்தின் நிர்வாகம், கொரோனா தடுப்பு விதிமுறைகளைமீறி மாஸ்க் அணியாமல் அதிக அளவில் ஆட்களைத் திரட்டி பேரணியில் ஈடுபட்டதாகக் கூறி அதிபர் போல்சனாரோவுக்கு (Jair Bolsonaro) 100 அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது.