பிரபல பாப் பாடகியின் நாய்களை திருட துப்பாக்கியால் சுட்டவருக்கு நேர்ந்த கதி!
பிரபல பாப் பாடகி லேடி காகா 3 நாய்களுடன் நடைபயிற்சிக்கு சென்ற போது மர்ம நபர்கள் குறித்த நாய்களை திருட முயன்றவேளை துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி லேடி காகா. செல்லப்பிராணிகள் மீது அதிக பிரியம் கொண்ட இவர், 'பிரெஞ்சு புல்டாக்' இனத்தை சேர்ந்த 3 நாய்களை வளர்த்து வருகிறார்.
இந்த நாய்களை பராமரிக்கும் பணியை ரியான் பிஷர் என்பவர் செய்து வந்தார். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ரியான் பிஷர், லேடி காகாவின் 3 நாய்களையும் நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் அந்த நாய்களை திருட முயன்றனர். இதை ரியான் பிஷர் தடுக்க முயன்றார். அப்போது அந்த 4 பேரில் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார்.
இதில் அவர் சுருண்டு விழுந்ததும் அந்த மர்ம நபர்கள் 2 நாய்களை திருடி சென்றனர். மற்றொரு நாய் அவர்களிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டது. பின்னர் அந்த நாயை பொலிஸார் மீட்டு லேடி காகாவிடம் ஒப்படைத்தனர்.
அதே போல் திருடப்பட்ட 2 நாய்களை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு 5 லட்சம் அமெரிக்க டொலர் (சுமார் ரூ.4.12 கோடி) சன்மானம் வழங்கப்படும் என லேடி காகா அறிவித்த நிலையில் திருடுபோன 2 நாட்களுக்கு பிறகு அந்த 2 நாய்களும் அவரிடம் வந்து சேர்ந்தன.
இதனிடையே நாய்களை திருட அதன் பராமரிப்பாளரை துப்பாக்கியால் சுட்டதாக ஜேம்ஸ் ஹோவர்ட் ஜாக்சன் என்பவரை பொலிஸார் கைது செய்த நிலையில், கலிபோர்னியா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் ஜேம்சுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.