பிரித்தானிய பிரதமருக்கு பிறகு அபராதம் செலுத்தும் ஒரு நாட்டின் ஜனாதிபதி
ஊரடங்கு உத்தரவுகளை மீறி விருந்து கொண்டாட்டங்களை முன்னெடுத்ததாக கூறி அர்ஜென்டினா ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா ஊரடங்கு அமுலில் இருந்த வேளை, பிரதமர் இல்லத்தில் கிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முன்னெடுத்ததாக கூறி பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது சகாக்கள் பலர் விசாரணையை எதிர்கொண்டு அபராதம் செலுத்தினர்.
தற்போது அதேபோன்றதொறு சம்பவம் அர்ஜென்டினாவில் அரங்கேறியுள்ளது. ஜூலை 2020ல் ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் மற்றும் அவரது மனைவி ஃபேபியோலா யானெஸ் ஆகியோர் ஊரடங்கு விதிகளை மீறி பிறந்தநாள் விருந்து நடத்தியதற்காக 3 மில்லியன் பெசோக்கள் ($24,000) அபராதம் செலுத்தியுள்ளனர்.
குறித்த தொகையானது சுகாதாரத்துறை ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. விருந்து தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதில் ஜனாதிபதியும் அவரது மனைவியும் மேலும் 9 விருந்தினர்களும் மாஸ்க் அணிந்து கொள்ளாமல் காணப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் ஜனாதிபதி பெர்னாண்டஸ் 1.6 மில்லியன் பெசோக்கள் அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் அவரது மனைவி 1.4 மில்லியன் பெசோக்கள் அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.