மர்மம் விலகாத இளம் பெண்கள் படுகொலை... சன்மானம் அறிவித்த பொலிஸ்
கனடாவின் Fort Erie பகுதியில் இரு இளம் பெண்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை துப்புத்துலங்காத நிலையில், நயாகரா பிராந்திய காவல்துறை சன்மானம் அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் காணொளி காட்சி ஒன்றை வெளியிட்ட நயாகரா பிராந்திய காவல்துறை, 20 வயதான வின்ட்சர் பகுதியை சேர்ந்த ஜூலியானா பன்னுன்சியோ(Juliana Pannunzio) மற்றும் ரொறன்ரோவை சேர்ந்த 18 வயது Christine Crooks ஆகிய இருவர் கொலை தொடர்பில் பொதுமக்கள் உதவ வேண்டும் என அதில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இரு இளம் பெண்களின் குடும்பத்தினரும் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே காணொளி ஒன்றை வெளியிட்டு மீண்டும் பொதுமக்கள் உதவியை நாடுவதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 19ம் திகதி சுமார் 4.17 மணிக்கு 911 இலக்கத்திற்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், குடியிருப்பு ஒன்றில் இருந்து குறித்த பெண்கள் இருவரின் உடல்களையும் மீட்டுள்ளனர்.
இதனிடையே, முதலுதவி அளிக்கும் சில நிமிடங்களில் துப்பாக்கி குண்டு காயம் காரணமாக இருவரும் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்ட இரு பெண்கள் உட்பட ஒரு குழுவினர் வாடகை குடியிருப்பு ஒன்றில் தங்கி இருந்ததாகவும், அவர்கள் எவரும் நயாகரா பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் அல்ல எனவும் தெரிய வந்தது.
அந்த குடியிருப்பினுள் நடந்த விவகாரமே, இரு பெண்கள் கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்றே பொலிசார் நம்புகின்றனர்.
மேலும், சம்பவப்பகுதிக்கு பொலிசார் வந்து சேரும் முன்னரே, இந்த இரு பெண்களுடன் தங்கியிருந்தவர்கள் மாயமாகியிருந்தனர்.
தற்போது இந்த வழக்கு தொடர்பில் குற்றவாளிகளை கைது செய்யும் வகையில் உறுதியான தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு 50,000 டொலர் சன்மானம் அளிக்கப்படும் என நயாகரா பிராந்திய பொலிசார் அறிவித்துள்ளனர்.