3 மாதங்களில் 15 ஆயிரம் வீரர்கள் கொலை: பிரித்தானிய இராணுவம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
உக்ரைன் மற்றும் ரஷ்யா போரில் கடந்த 3 மாதங்களில் ரஷ்ய வீரர்கள் 15 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா இன்றுடன் 88 வது நாளாக போரை தொடுத்து வருகின்றது.
வலிமையான படைகள் மூலம் உக்ரைனை எளிதாக ஆக்கிரமித்துவிடலாம் என்கிற எண்ணத்தில் ரஷ்யா இந்த போரை தொடங்கிய சூழலில், உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போரை எதிர்கொண்டு வருவதால் போரின் இலக்கை எட்ட முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது.
மேலும் இந்த போரில் உக்ரைனை காட்டிலும் ரஷ்யா பெரும் இழப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கிழக்கு உக்ரைனில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை இணைக்கும் ஆற்று பாலத்தை உக்ரைன் வீரர்கள் தாக்கி அழித்தபோது, ரஷ்யாவின் ஒரு படைப்பிரிவினர் கூண்டோடு கொல்லப்பட்டனர். இது போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்பின் முதல் 3 மாதங்களில் பலியான ரஷ்ய துருப்புகளின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் 9 ஆண்டுகள் நடந்த போரில் சோவியத் யூனியன் சந்தித்த உயிரிழப்புகளுக்கு சமம் பிரித்தானிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1979 மற்றும் 1989-க்கு இடையில் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனை சேர்ந்த சுமார் 15,000 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
அதன்படி உக்ரைன் பேரில் ரஷ்யா இதுவரை 15 ஆயிரம் வீரர்களை இழந்திருக்கலாம் என இங்கிலாந்து கூறுகிறது.
ரஷ்யா கடைசியாக கடந்த மார்ச் மாதம் உக்ரைன் போரில் தங்கள் வீரர்கள் 1,300 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது.
அதன் பிறகு இப்போது வரை போரில் தங்கள் தரப்பில் எத்தனை இழப்புகள் ஏற்பட்டன என்பதை ரஷ்யா பகிரங்கமாக அறிவிக்கவில்லை.