சமூக ஊடக மோகம் ; ஆபத்தான சாகசம்.. 5 இளைஞர்கள் உயிரிழப்பு
அயர்லாந்தில் சமூக ஊடகங்களில் அதிகப் பார்வையாளர்களைப் பெறுவதற்காக இளைஞர்கள் நெடுஞ்சாலைகளில் தவறான திசையில் வாகனம் செலுத்தும் ஆபத்தான போக்கில் ஈடுபட்டு வருவதாக அயர்லாந்து பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், டப்ளின் வானூர்தி நிலையத்துக்குப் பயணித்த மற்றுமொரு வாகனத்தின் மீது, தவறான திசையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதி 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அயர்லாந்து அரசாங்கம் தீவிர நடவடிக்கை
விபத்தில் மற்றைய வாகனத்தில் பயணித்த மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து, ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான வீதிப் பயணங்களை ஊக்குவிக்கும் விதமாக வெளியிடப்படும் காணொளிகளை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு அயர்லாந்து நாடாளுமன்றக் குழு மற்றும் ஊடக ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு என்பன டிக்டொக் (TikTok) நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இதேவேளை, விதிகளை மீறும் கணக்குகள் மற்றும் விபத்து தொடர்பான காணொளிகளைத் தீவிரமாகக் கண்காணித்து அகற்றி வருவதாக டிக்டொக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இளைஞர்கள் குழுக்களாக இணைந்து , போக்குவரத்து விதிகளுக்கு மாறாக வாகனம் செலுத்தியும் காணொளிகளைப் பதிவிட்டு வருவதைக் கட்டுப்படுத்த அயர்லாந்து அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
நெடுஞ்சாலையில் தவறான திசையில் வாகனம் செலுத்துவதைத் தனிக் குற்றமாக அறிவிக்கவும், காவல்துறைக்கு விசேட வாகனத் துரத்தல் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.