கனடாவில் சக மாணவி மீது தீ வைத்த சிறுமிக்கு 3 ஆண்டுகள் சிறை!
கனடாவின் சாஸ்கடூன் நகரில் உள்ள 'இவன் ஹார்டி' (Evan Hardy Collegiate) உயர்நிலைப் பாடசாலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சக மாணவி ஒருவரைத் தீயிட்டுக் கொளுத்திய 16 வயது சிறுமிக்கு நீதிமன்றம் அதிகபட்ச தண்டனையை வழங்கியுள்ளது.
இளம் குற்றவாளிகள் நீதிச் சட்டத்தின் கீழ், கொலை முயற்சி குற்றத்திற்காக வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையான 3 ஆண்டுகளை நீதிபதி விதித்துள்ளார்.
கடந்த ஆண்டு மதிய உணவு இடைவேளையின் போது, அப்போதைய 15 வயது மாணவி மீது எரியூட்டும் திரவத்தை (Lighter fluid) ஊற்றி இந்தச் சிறுமி தீ வைத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானார். இவர்களுக்கு இடையிலான நட்பு, காலப்போக்கில் ஒருவிதத் தீவிரமான ஆவேசமாகவும் மிரட்டலாகவும் மாறியதே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளியான சிறுமி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அரசுத் தரப்பு மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளின் இணக்கப்பாட்டுடன் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
முதல் 2 ஆண்டுகள், தீவிர புனர்வாழ்வு மற்றும் கண்காணிப்புடன் கூடிய சிறைவாசம் (Intensive rehabilitative custody), இறுதி 1 ஆண்டு, சமூக கண்காணிப்புடன் கூடிய விடுதலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ள நிலையில், குற்றவாளிக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.