கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் நீட்டித்த ரொறன்ரோ நிர்வாகம்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையில் பொதுவெளியில் மாஸ்க் கட்டாயம் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரொறன்ரோ நிர்வாகம் நீட்டித்துள்ளது.
செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ம் திகதிகளில் நடைபெறவிருக்கும் கவுன்சில் கூட்டம் வரையில் தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் என்றே நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
பூங்காக்களில் சமூக இடைவெளி, பொதுவெளிகளில் மாஸ்க் கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பு வளாகங்களில் உள்ள நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
உணவகங்களில் தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும், மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்.
ரொறன்ரோ நகரை பொறுத்தமட்டில், 72.3% மக்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுக்கொண்டுள்ளனர். மொத்த குடிமக்களில் 10% பேர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர்.
இருப்பினும் டெல்டா மாறுபாடு உள்ளிட்ட காரணங்களால் அச்சுறுத்தல் தொடர்வதாகவே நகர நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளை மீறும் பொதுமக்கள் 750 டொலருக்கு மேல் அபராதம் செலுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.