படகு பயணக் கட்டணம்: நோவா ஸ்கோடியா தாராள முடிவு
அனைத்து மாகாண படகு போக்குவரத்துகளுக்கான பயணக் கட்டணங்களை நோவா ஸ்கோடியா நிரந்தரமாக நீக்கியுள்ளது.
கொரோனா பரவலை அடுத்து கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே நோவா ஸ்கோடியாவில் படகு பயணங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை Englishtown படகு முனையத்தில் வைத்து பேசிய முதல்வர் Iain Rankin குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த முடிவானது இனி படகு போக்குவரத்து நோவா ஸ்கோடியா மக்களால் அதிகமாக பயன்படுத்தக்கூடிய வகையில் அமையும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் Englishtown படகு முனையம் மட்டும் ஆண்டுக்கு 250,000 மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கட்டணம் முற்றாக நீக்கப்பட்டுள்ளதால், கண்டிப்பாக அதிக மக்கள் பயன்படுத்துவார்கள் என போக்குவரத்து துறை அமைச்சர் லாயிட் ஹைன்ஸ் கூறியுள்ளார்.
மாகாணத்தின் கீழ் செயல்படும் மொத்தம் 7 படகுகளில் ஆண்டுக்கு சுமார் ஒரு மில்லியன் மக்கள் பயன்பெறுகின்றனர். இதனால் வருவாயாக 1.3 மில்லியன் டொலர் தொகை அரசுக்கு கிடைக்கிறது.
ஆனால், இந்த படகுகளை செயல்படுத்துவதற்கான செலவு ஆண்டுக்கு 10.7 மில்லியன் டொலர் தொகை என போக்குவரத்து துறை அமைச்சர் லாயிட் ஹைன்ஸ் கூறியுள்ளார்.
தற்போது பயணக் கட்டணங்கள் முற்றாக நீக்கப்பட்டுள்ளதால், படகுகளில் பணியாற்றும் 100 பேர்களில் ஒருவர் கூட பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் உறுதி அளித்துள்ளார்.