ஆபத்தான ஓமிக்ரான்... கனடாவில் இரயில், விமான பயணிகளுக்கு இனி இது கட்டாயம்
கனடாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இனி விமானம் மற்றும் பயணிகள் இரயிலில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 30ம் திகதி முதல் குறித்த விதியானது அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் பெடரல் அரசாங்கமானது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு மேலும் சிறிது காலம் அவகாசம் அளித்திருந்தது.
இருப்பினும், பயண நேரத்திற்கும் 72 மணி நேரம் முன்னதாக பதிவு செய்யப்பட்ட கொரோனா சோதனை முடிவுகளை சமர்ப்பிக்க கோரியிருந்தது. தற்போது, ஆபத்தான ஓமிக்ரான் மாறுபாடு உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், கனடா நிர்வாகம் தமது முடிவையும் மாற்றிக்கொண்டுள்ளதுடன், விமானம், இரயில் பயணங்களுக்கு தடுப்பூசி இனி கட்டாயம் என அறிவித்துள்ளது.
12 வயதுக்கு மேற்பட்ட, தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இனி தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் விமான, இரயில் சேவைகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய ஓமிக்ரான் மாறுபாடு காரணமாக சர்வதேச எல்லைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், கடுமையான கட்டுப்பாடுகளும் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
தனிப்பட்ட காரணங்களுக்காக தடுப்பூசியில் இருந்து விலக்கு பெற்றுக்கொண்டவர்கள், கட்டாயம் சமீபத்திய கொரோனா சோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் எனபது குறிப்பிடத்தக்கது.