300 க்கும் மேற்பட்ட டிரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!
ஈரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட 300க்கும் அதிகமான டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் 8 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தாக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் இதுவரை ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை (டிரோன்கள்) சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஈரானில் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஷாஹெட்-136 காமிகேஸ் டிரோன்களை கீவ் வீழ்த்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பில்,
"ரஷ்யாவுடனான 6 மாதங்களுக்கு மேலான போரில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஈரானில் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை தாக்கி அழித்துள்ளோம். இந்த ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவுக்கு முக்கியப் பங்காற்றியுள்ளன.
உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளை தாக்கி அழிப்பதற்கு இந்த ஆளில்லா விமானங்கள் உதவியுள்ளன" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டிரோன்களை ரஷ்யாவுக்கு தங்கள் நாடு ஏற்றுமதி செய்கிறது என்ற குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
உக்ரைன் பலமுறை வான் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவுவதற்கு சர்வதேச நாடுகளின் உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளது, இதனால் ரஷ்யா அதன் மீதான தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது.