தடுப்பூசி மறுப்பவர்களுக்கு மாதந்தோறும் அபராதம் விதிக்கும் ஐரோப்பிய நாடு
கிரேக்கத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் முதியவர்கள் இனி ஒவ்வொரு மாதமும் அபராதம் செலுத்த நேரிடும் என நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.
தடுப்பூசி போட மறுக்கும் மக்கள் ஒவ்வொரு மாதமும் அபராதம் செலுத்த நேரிடும் கடும்போக்கு நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.
கிரேக்கத்தில் 60 வயது கடந்த அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் முதியவர்கள் இனி மாதந்தோறும் 100 யூரோ அபராதமாக செலுத்த நேரிடும்.
ஆபத்தான கொரோனா மாறுபாடு ஒருபக்கம், நெருங்கும் பனிக்காலம் ஒருபக்கம் என அச்சுறுத்தல் நெருக்கும் நிலையிலேயே கிரேக்க அரசாங்கம் மாதந்தோறும் அபராதம் என்ற கடும்போக்கு நடவடிக்கையை முன்னெடுக்க இருக்கிறது.
குறித்த நடவடிக்கையை ஆதரித்துப் பேசிய பிரதமர் Kyriakos Mitsotakis, இது ஆரோக்கிய வாழ்வுக்கு நாம் அளிக்கும் கட்டணமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், நமது சக குடிமக்களின் பாதுகாப்பில் நாம் கவனம் செலுத்துகிறோம், இதன் காரணமாக அவர்களுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார் பிரதமர் Kyriakos Mitsotakis.
60 வயது கடந்த குடிமக்கள் எதிர்வரும் ஜனவரி 16ம் திகதிக்குள் தங்கள் முதல் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள பதிவு செய்ய தவறினால், ஒவ்வொரு மாதமும் 100 யூரோ அபராதமாக செலுத்த வேண்டும்.
கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதால், ஊரடங்கு உட்பட கட்டாய நெருக்கடிக்கு நாடு தள்ளப்படுவதை தவிர்க்கலாம் என கிரேக்க அரசாங்கம் நம்புகிறது.
ஆனால், மாதம் 100 யூரோ அபராதம் விதிக்கப்படுவது மிகவும் கடுமையான முடிவு எனவும், முதியோர்களுக்கு மாத ஓய்வூதியமாக அளிக்கப்படுவதே 730 யூரோ தான் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.