அமெரிக்கா - கனடா இடையே தீவிரமடையும் உருளைக்கிழங்கு சர்ச்சை!
கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய உருளைக்கிழங்களுக்கான கட்டுப்பாடுகளை அமெரிக்க வேளாண்மைத் துறை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
உருளைக்கிழங்கைப் பாதிக்கும் ஒருவகை பூஞ்சை நோய் பரவும் அபாயம் இருப்பதாகக் கூறி, அமெரிக்க அமைப்புகள் முழுமையான தடை கோரிய நிலைக்குப் பதிலாக, வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் புதிய இறக்குமதி விதிகள் அமல்படுத்தப்படவுள்ளன.
இதன்படி, 50 பவுண்டுக்கும் அதிகமான மொத்த உருளைக்கிழங்கு மூட்டைகளை இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் கழிவு மேலாண்மை ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதும், உருளைக்கிழங்குகள் எந்தப் பண்ணையிலிருந்து வந்தன என்பதைக் கண்டறியும் துல்லியமான லேபிளிங் முறைகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் கனடிய உருளைக்கிழங்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தங்கள் பகுதியிலிருந்து நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தாவரப் பாதுகாப்பை விட தங்களின் சந்தைப் போட்டியையும் அரசியலையும் மையமாகக் கொண்டது என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2021-ஆம் ஆண்டு இதே காரணத்தைக் கூறி விதிக்கப்பட்ட தடையால், இத்தீவின் உருளைக்கிழங்குத் துறை சுமார் 50 மில்லியன் டாலர் வருவாய் இழப்பைச் சந்தித்ததுடன், 25 கோடி பவுண்ட் உருளைக்கிழங்குகளை அழிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதத்தில் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள ஒரு பண்ணை நிலத்தின் மண்ணில் இந்த பூஞ்சை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 100 பில்லியன் டாலர் மதிப்புடைய அமெரிக்க உருளைக்கிழங்குத் தொழிலைப் பாதுகாக்க முழுத் தடை விதிக்க வேண்டும் என வாஷிங்டன் அமைப்புகள் வலியுறுத்தின.
எனினும் முழுத் தடை விதிக்காமல் புதிய நிபந்தனைகளை மட்டுமே அமெரிக்க அரசு கொண்டுவந்துள்ள நிலையில், இதனால் ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைக் குறைக்கவும், கட்டுப்பாடுகளில் தளர்வுகளைப் பெறவும் கனடிய உருளைக்கிழங்கு வாரியம் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.