ஒன்ராறியோவில் முழுமையாக தடுப்பூசி பெற்ற பெண்மணிக்கு ஏற்பட்ட துயரம்
ஒன்ராறியோவில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் பெண்மணி ஒருவர், முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்தும், கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
Kitchener பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திலேயே 90 வயதான அந்த பெண்மணி வசித்து வந்துள்ளார். இப்பகுதியில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்த முதியோர் இல்லத்திலும் ஊழியர்கள் நால்வருக்கும் குடியிருப்பவர்களில் ஐவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் 90 வயது பெண்மணியின் இறப்பே முதல்முறை என அந்த இல்லத்தின் நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், மரணமடைந்த பெண்மணிக்கு லேசான அறிகுறிகளே காணப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது டெல்டா மாறுபாடு அதிகமாக வியாபித்து வருவதாக கூறப்படுகிறது.
குறித்த பெண்மணியின் இறப்புக்கு காரணம் டெல்டா மாறுபாடா என்பது தொடர்பிலும் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஒன்ராறியோவை பொறுத்தமட்டில் ஞாயிறன்று மட்டும் 318 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் வாட்டர்லூ பிராந்தியத்தில் 51, பீல் பிராந்தியத்தில் 49, ரொறன்ரோவில் 45, ஒட்டாவாவில் 26 மற்றும் ஹாமில்டனில் 20 என பதிவாகியுள்ளது.