ஜூலை மாதம் முதல்... கனடா வரும் சுற்றுலாப்பயணிகளுக்காக அரசு கொண்டுவரும் புதிய திட்டம்
பயணக்கட்டுப்பாடுகளை நெகிழ்த்த கனடா அரசை சுற்றுலா தொழில் துறை வலியுறுத்திவரும் நிலையில், கனடாவுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கான தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தின் முதல் கட்டத்தை அடுத்த மாதம் அமுலுக்கு கொண்டு வர பெடரல் அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி, ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில், அரசின் ArriveCan ஆப்பில் ஒரு புதிய அம்சம் சேர்க்கப்பட உள்ளது.
இந்த ஆப்பில், பயணிகள் சுங்கச் சோதனைக்கு செல்லும் முன், தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆவணத்தை புகைப்படம் அல்லது ஸ்னாப்ஷாட் எடுத்து இணைத்துக்கொள்ளலாம். இந்த தகவல் ஆப்பிலேயே இருக்கும், அதை வேறு எங்கும் மாற்றமுடியாது.
அதனால், பயணிகளின் தனியுரிமைக்கு பாதிப்பு ஏற்படாது. இந்த ஆப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றம், அரசு சர்வதேச பயணங்கள் தொடர்பில் விதித்துள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாக நெகிழ்த்த வழிவகை செய்துள்ளது.
அதாவது நாட்டுக்குள்ளோ அல்லது நாட்டிலிருந்தோ பயணத்தை அனுமதிப்பது, ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளாரா அல்லது அவருக்கு கொரோனா உள்ளதா இல்லையா என்பதன் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுவதால், ArriveCan ஆப்பில் பயணிகள் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான அல்லது தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை இனைக்கும்போது, சுங்கச் சோதனையின்போது அது பயணிகள் எளிதில் நாட்டுக்குள்ளோ அல்லது நாட்டிலிருந்தோ எல்லை தாண்டி பயணிப்பதை எளிதாக்குகிறது.
ஏற்கனவே, இம்மாத துவக்கத்தில், முழுமையாக தடுப்பூசி பெற்ற கனேடியர்கள் மற்றும் கனேடிய நிரந்தர வாழிட உரிம பெற்றோர், கனடாவுக்குள் வரும்போது, அவர்கள் தங்கள் தனிமைப்படுத்தல் காலகட்டத்தின் ஒரு பகுதியாக, ஹொட்டல்களில் தங்கவேண்டிய அவசியம் இருக்காது என்னும் நிலை சீக்கிரத்தில் உருவாக்கப்படும் என பெடரல் அரசு அறிவித்திருந்ததும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.