புதிய வகை கொரோனா மாறுபாடு: உலக சுகாதார அமைப்பு சிறப்பு ஆலோசனை
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா மாறுபாடு தொடர்பில் உலக சுகாதார அமைப்பு இன்று ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாபிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய வீரியம் மிகுந்த கொரோனா மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாடுகளில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த மாறுபாடு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த புதிய மாறுபாடு ஏற்கெனவே அண்டை நாடுகளுக்குப் பரவிவிட்ட நிலையில் மேலும் பல நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பொஸ்வானா நாட்டில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் இந்தப் புதிய மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகை மாறுபாடு, தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டவை, வேகமாகப் பரவும், கொரோனாவின் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பத் தலைவர் மற்றும் தொற்றுநோய்த் தடுப்பு வல்லுநர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், 100 வகையான மாறுபாடு ஜீன்கள் உள்ளன. ஆனால், இந்தப் புதிய வகை மாறுபாடு குறித்து இதுவரை விரிவான தகவல் இல்லை.
இந்த மாறுபாடு அதிகமாக உருமாற்றம் அடையுமா என்பதும் தெரியவில்லை. அதிகமான உருமாற்றம் அடையும்போது, இந்த மாறுபாட்டின் தாக்கம், எவ்வாறு மனிதர்கள் உடலில் பாதிக்கிறது என்பது தெரியவரும் என குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின்படி, ஆபிரிக்காவில் 27 சதவீத சுகாதாரத்துறையினர் மட்டுமே தடுப்பூசியை முழுமையாகச் செலுத்தியுள்ளனர்.
கடந்த 4 மாதங்களாகத் தென்னாபிரிக்காவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் 48 சதவீதம் திடீரென அதிகரித்தது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.