குர்பானிக்கு விற்கப்பட்ட "டொனால்ட் ட்ரம்ப்" எருமை; பலியிடுவதற்கு பதிலாக இடமாற்றம்
பங்களாதேஷில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமுடியை ஒத்த பொன்னிற உரோமக் கற்றையைக் கொண்ட அரிதான வெள்ளை எருமை ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து தியாகத் திருநாள் குர்பானியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் தியாகத் திருநாள் வழிபாட்டுக்காக இந்த எருமை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டிருந்தது. எனினும், இதன் தனித்துவமான தோற்றம் காரணமாக, சமூக ஊடகங்களில் இதன் புகைப்படங்களும் காணொளிகளும் வேகமாகப் பரவி, நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமுடி அமைப்பைப் போன்ற பொன்னிற உரோமத்தைக் கொண்டிருப்பதாலேயே இதற்கு "டொனால்ட் ட்ரம்ப்" எனப் பெயரிடப்பட்டதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சுமார் 700 கிலோகிராம் எடையைக் கொண்ட இந்த அரிதான வெள்ளை எருமையைப் நேரில் பார்ப்பதற்காக, அது வைக்கப்பட்டிருந்த பண்ணைக்குப் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவிலான மக்கள் திரண்டு வரத் தொடங்கினர்.
இந்தநிலையில் பண்ணையில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததை அடுத்து, பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மை காரணங்களுக்காகப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் அதிகாரிகள் எருமையைப் பலியிடுவதற்குப் பதிலாக, அதனைத் தலைநகர் டாக்காவிலுள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு மாற்றுவதற்கு தற்போது ஏற்பாடு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.