அமெரிக்காவின் முக்கிய மாநிலத்தில் முகக் கவசமின்றி நடமாட அனுமதி
தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசங்களின்றி நடமாடுவதற்கு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் அனுமதித்துள்ளது. அத்துடன் பல்வேறு சமூக இடைவெளி விதிகளும் நீக்கப்பட்டுள்ளன.
நேற்று (15) முதல் இவை அமுலுக்கு வந்துள்ளன. அமெரிக்காவில் மிக அதிக சனத்தொகையைக் கொண்ட கலிபோர்னியா மாநிலமே அந்நாட்டில் கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்காக முதன் கடந்த வருடம் மார்ச் 15 ஆம் திகதி முதலில் லொக்டவுணை அமுல்படுத்தியது. தற்போது 15 மாதங்கள் கடந்த நிலையில், பெரும்பாலான சமூக இடைவெளி கட்டுப்பாட்டு விதிகளை கலிபோர்னியா மாநிலம் நீக்கிள்ளது இது கலிபோர்னியாவின் மாபெரும் மீள்திறப்பு (grand reopening) என இது வர்ணிக்கப்படுகிறது.
அதன்படி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் கலிபோர்னியாவின் பெரும்பாலான பொது இடங்களுக்கு முகக்கவமின்றி செல்லலாம். ஆனால், பொதுப்போக்குவரத்து சேவைகள், வைத்தியசாலைகள், யாசகர்களுக்கான நிலையங்கள், சிறைச்சாலைகள், பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் போன்ற இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் இருக்கலாம் என்பதால் அங்கு முகக்கவமின்றி செல்லவதற்கு அனுமதியில்லை.
அதேவேளை மதுபான விடுதிகளில் முழுக் கொள்ளவுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களை உள்ளெடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையானோர் ஒன்றுகூடும் நிகழ்வுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உள்ளக அரங்கு நிகழ்வுகளில் 5000 பேரும் திறந்த அரங்க நிகழ்வுகளில் 10,000 பேரும் பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா மாநிலத்தில் சுமார் 4 கோடி மக்கள் வசிரும் நிலையில் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்திலேயே கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். அங்கு இதுவரை சுமார் 38 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 63,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த டிசெம்பர் மாதம் கலிபோர்னியாவில் கொவிட்19 தடுப்புமருந்தேற்றல் நடவடிக்கை ஆரம்பமாகிய நிலையில் இதுவரை 40.5 மில்லியன் (4.05 கோடி) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
அதேவேளை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் கொவிட்19 பெருந்தொற்று முடிவுக்கு வரவில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.