ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது? ; டிரம்ப் கேள்வி
ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது? என்று டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஈரான் நாட்டில் உள்ள போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 முக்கிய அணு செறிவூட்டல் நிலையங்கள் மீது அமெரிக்கா நேற்று குண்டு வீசி தாக்கியது.
இந்த தாக்குதலுக்கு பிறகு, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க மக்களுக்கு விளக்கமளிக்க, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "அமெரிக்க ராணுவ தாக்குதல்களால் ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் முற்றிலும் முழுமையாகவும் அழிக்கப்பட்டுவிட்டன.
இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நமது போர் விமானங்கள் பத்திரமாக திரும்பி விட்டன. இன்னும் பல நிலைகள் மிது குறிவைத்துள்ளோம்.
இதுபோன்ற தாக்குதல்களை அமெரிக்க ராணுவத்தால் மட்டுமே முடியும். இதற்காக நமது ராணுவத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.
ஈரானுக்கு ஏற்கனவே பலமுறை வாய்ப்புகளை வழங்கிவிட்டோம். இப்போது அவர்களுக்கு (ஈரானுக்கு) 2 வாய்ப்புகளே உள்ளன. 'அமைதி அல்லது ஆழிவு' இதில் ஒன்றைத்தான் அவர்கள் தேர்ந்து எடுக்க முடியும்.
ஈரான் உடனடியாக அமைதி வழிக்கு திரும்ப வேண்டும். போரை நிறுத்த சம்மதிக்க வேண்டும். இல்லையென்றால் விளைவுகள் மோசமாகும்.
இந்த எச்சரிக்கையை ஏற்று உடனடியாக அமைதிப்பாதைக்கு திரும்புங்கள். இல்லையென்றால் எதிர்காலத்தில் தாக்குதல்கள் தொடரும்.
ஈரான் பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வருகிறது. எனவே அந்த நாடு அணு ஆயுதங்களை உருவாக்குவதை தடுப்பதே இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம்.
40 ஆண்டுகளாக அமெரிக்காவை அழிப்போம், இஸ்ரேலை அழிப்போம் என்று ஈரான் கூறி வருகிறது. அவர்கள் நம் மக்களைக் கொன்று வருகின்றனர்.
அதற்கெல்லாம் முடிவு கட்டும் காலம் வந்துவிட்டது" என்று டிரம்ப் கூறினார். இந்நிலையில் ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது? என்று டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்களுக்கு ஏற்பட்ட சேதம் "மிகப்பெரியது" என்று கூறப்படுகிறது.
தாக்குதல்கள் கடினமாகவும் துல்லியமாகவும் இருந்தன. நமது ராணுவத்தால் சிறந்த திறமை காட்டப்பட்டது.
நன்றி! "ஆட்சி மாற்றம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதல்ல, ஆனால் தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது??? கிரேட் பி-2 விமானிகள் மிசோரியில் பாதுகாப்பாக தரையிறங்கினர்.