லண்டனில் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞர்!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 15 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், பட்டபகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லண்டனில், சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு குறித்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. 18 வயதேயான குலாம் சாதிக்(Ghulam Sadiq) என்ற இளைஞர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில், முதலுதவி அளிக்கப்படும் வேளையில் சம்பவயிடத்தில் மரணமடைந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸார் இதுவரை கைது நடவடிக்கை எதையும் முன்னெடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட குலாம் சாதிக் (Ghulam Sadiq) குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சிறப்பு அதிகாரிகள் அவர்களுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், உடற்கூராய்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் லண்டன் நகரில் வாள்வெட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகியுள்ளனர்.
இஸ்லிங்டனில் உள்ள பூங்கா ஒன்றில் வியாழக்கிழமை 15 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு சம்பவயிடத்தில் பலியாகியுள்ளார். குலாம் வழக்கில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பொலிஸாருக்கு உதவ முன்வர வேண்டும் எனவும்,தாக்குதலில் ஈடுபட்ட குழு தொடர்பில் தகவல் அறிந்த மக்கள் விசாரணை அதிகாரிகளை நாடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் 2022 மார்ச் மாதம் வரையில் மொத்தம் 6.3 மில்லியன் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.