ChatGPT-ஐப் பயன்படுத்திய பின், தாய், சகோதரனைக் கொன்ற 17 வயது இளைஞர்
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் ஆக்டன் நகரில், 17 வயது சிறுவன் ஒருவர் தனது தாயையும் 14 வயது தம்பியையும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அர்ஜுன் அரவிந்த் (17) மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள், குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் வன்முறை தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை 6.40 மணியளவில் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாததால், அர்ஜுனின் தந்தை காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
வீட்டிற்கு வரவிருந்த ஆசிரியரும் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், வீட்டின் முதல் தளத்தில் 14 வயது சிறுவனின் உடலையும், அடித்தளத்தில் அவரது தாயின் உடலையும் கண்டெடுத்தனர்.
இதையடுத்து தலைமறைவான அர்ஜுனை காவல்துறையினர் தேடி வந்தனர். அவர் தனது தாயின் 2014ஆம் ஆண்டு பச்சை நிற ஹோண்டா அக்கார்டு காரில் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் புதன்கிழமை காலை, வேறு ஒரு அலாரம் அழைப்பை விசாரிக்கச் சென்ற காவல்துறையினர் அர்ஜுனைக் கண்டுபிடித்தனர்.
குடும்பத்தினரைக் கொல்வது தொடர்பான கற்பனைகள் மற்றும் கருத்துகளை இணையத்திலும் ChatGPT-யிலும் தேடியது உள்ளிட்ட ஆபத்தான நடத்தைகளை சிறுவன் சமீபத்தில் வெளிப்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை முதன்மை மருத்துவப் பரிசோதகர் தீர்மானிக்க உள்ளார். இருவரும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஆயுதம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், வாகனத்தை அனுமதியின்றி பயன்படுத்தியமை மற்றும் மோட்டார் வாகனத் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளும் அர்ஜுன் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அவர் வியாழக்கிழமை கான்கார்ட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கொலை மற்றும் தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள உள்ளார்.