மாடு கத்தியதால் பண்ணையாருக்கு 102,000 யூரோ அபராதம் விதித்த நீதிமன்றம் !
பிரான்ஸில் உள்ள பால் பண்ணையாளர் ஒருவருக்கு 102,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பாரிஸின் வடக்கே உஆஸ் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் சேர்ந்த பண்ணையார் ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பால் பண்ணையாளரின் மாடுகளால் ஏற்பட்ட சத்தம் மற்றும் சாணியின் நாற்றம் காரணமாக அவரது அயல்வீட்டை சேர்ந்த 6 பேர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் 200க்கும் மேற்பட்ட மக்கள் பால் பண்ணையாளருக்கு ஆதரவாக முன் வந்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற வழக்கின் போது அயலவர்களுக்கு தொந்தரவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.
மேல் முறையீடு செய்ய முடியாத காரணத்தினால் இந்த மாதம் அவர் அபராதம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த நபருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
அதில் பிரான்ஸின் தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் கலந்து கொண்டுள்ளார். அத்தகைய முடிவு பண்ணை தொழிலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அதனை அனைத்து பிரெஞ்சு விவசாயிகளின் சார்பாக ஏற்றுக் கொள்ள முடியாதென விவசாய சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள நபர் கடந்த 10 வருடங்களாக அயலவர்களுடன் போராடி வருகின்றார். அத்துடன் அவரது 260 மாடுகளால் அதிக சத்தம் மற்றும் நாற்றத் ஏற்படுத்துவதாக அயலவர்கள் தங்கள் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர். எனினும் கிராமபுற வாழ்க்கை என்றால் அப்படிதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனது மாடுகளின் சத்தமும் நாற்றமும் தொல்லை என கூறினாலும் அது அசாதாரணமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் அவரது பண்ணை அண்டை வீடுகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளமையினால் அது சட்டவிரோதமானதென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய தரத்தின்படி, குறித்த பண்ணையாளர் மாடுகள் தங்குவதற்கு ஒரு பெரிய தொழுவத்தை கட்ட வேண்டும். குடியிருப்புகளிலிருந்து குறைந்தபட்சம் 100 மீட்டர் தொலைவில் அதனை அமைக்க வேண்டும்.
எனினும் அவ்வாறு 100 மீட்டர் தொலைவில் தனக்கு எந்த நிலமும் தனக்கு இல்லை என்பதால், அதைக் கட்ட அனுமதிக்க சிறப்பு விலக்கு பெற வேண்டும். அதற்கமைய அனுமதி பெற்றே பண்ணையை அவர் கட்டியுள்ளார்.
தொழுவத்தை கட்டுவதற்காக 600,000 யூரோ கடன் பெற்று அதனை செலுத்தி வரும் நிலையில் தன்னால் இந்த அபராதத்தை செலுத்தவது சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நீதிமன்றத்தின் இந்த அபராத உத்தரவை மீற முடியாதமையால் குறித்த பண்ணையார் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.