அமெரிக்காவுக்கு எதிரான ஆளில்லா வானூர்தி அச்சுறுத்தல் எச்சரிக்கை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஈரான் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை நடத்தக்கூடும் என எஃப்.பி.ஐ விடுத்த எச்சரிக்கை, உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலின் அடிப்படையிலானது என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
ஈரானில் இருந்து வரும் கடல்சார் கலன்கள் மூலம் கலிபோர்னியா மீது ஆளில்லா வான்வழி வாகனங்களைக் கொண்டு திடீர் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என கடந்த பெப்ரவரி ஆரம்பத்தில்; எஃப்.பி.ஐ எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த எச்சரிக்கை தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெள்ளை மாளிகை இதனை மறுத்துள்ளது.
அத்துடன், கலிபோர்னியா காவல்துறையினருக்கு அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில் இருந்த ஒற்றை, உறுதிப்படுத்தப்படாத தகவலின் அடிப்படையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.
"தெளிவாகச் சொல்லப்போனால், ஈரானிடமிருந்து நமது தாய்நாட்டிற்கு அத்தகைய அச்சுறுத்தல் எதுவும் இல்லை, எப்போதும் இருந்ததில்லை" என லெவிட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.