ஈரானின் அதியுயர் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானியின் கையெழுத்தில் வந்த எக்ஸ் பதிவால் பரபரப்பு
ஈரானின் அதியுயர் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் உரிமை கோரியுள்ள போதிலும், ஈரான் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், அலி லாரிஜானியின் உத்தியோகபூர்வ எக்ஸ் (X) கணக்கில் கையால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஈரானிய அரச ஊடகங்களாலும் பகிரப்பட்டுள்ள இந்தக் குறிப்பானது, அண்மையில் அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்துள்ளது.
உயிரிழந்த வீரர்களின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவிருந்த நிலையில், அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தக் குறிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், அலி லாரிஜானி மற்றும் பாசிஜ் படைத் தளபதி சுலைமானி ஆகியோர் கொல்லப்பட்டதாகத் தொலைக்காட்சியில் அறிவித்த சில நிமிடங்களிலேயே இந்தக் குறிப்பு வெளியாகியுள்ளது.

லாரிஜானி உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்த ஈரான் இதனை வெளியிட்டதா? அல்லது ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட குறிப்பை அவரது அலுவலகம் வெளியிட்டுள்ளதா?என்பது குறித்த விவாதங்கள் தற்போது எழுந்துள்ளன.
ஈரானில் இணையத் தட்டுப்பாடு மற்றும் தொடர் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அங்கிருந்து வரும் தகவல்களை உறுதிப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
எவ்வாறாயினும், லாரிஜானியின் அலுவலகம் விரைவில் ஒரு விரிவான அறிக்கையை வெளியிடும் என ஈரான் அரச ஊடகங்களை மேற்கோள் காட்டி அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.