பார்வையற்றோருக்கான பாடசாலையில் தீ விபத்து! 11 பேர் உயிரிழந்த சோகம்
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தலைநகர் கம்பாலா அருகில் முகோனா என்ற இடத்தில் பார்வையற்றோருக்காக சலாமா என்ற பெயரில் ஒரு பாடசாலை ஒன்று இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் அங்கு அதிகாலையில் திடீரென தீப்பிடித்தது. மின்னல் வேகத்தில் அந்தத் தீ பாடசாலை முழுவதும் பரவியது.
இது தொடர்பில் தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் 11 பேர் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அங்குள்ள ஹெரோனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தத் தீவிபத்தின் காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.
உகாண்டாவில் பாடசாலைகளில் தீ விபத்துகள் நேருவது ஒன்றும் புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
சில நேரங்களில் குழந்தைகள் தங்கள் தங்குமிடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு விளக்குகள் அணையும்போது மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கிறபோது அது தீவிபத்துக்கள் ஏற்பட வழிநடத்தி விடுகிறது.