லெபனான்–இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பம் ; வரலாற்று கோட்டை இஸ்ரேல் கட்டுப்பாட்டில்
இஸ்ரேல் ராணுவம், லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க போபோர்ட் கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த கோட்டை, லெபனானின் முக்கிய நகரமான நபதியா அருகே அமைந்துள்ளதுடன், சுமார் 900 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க இடமாகக் கருதப்படுகிறது.

12ஆம் நூற்றாண்டில் சிலுவைப் போர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த காலத்தில், 1982ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது இந்த கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றி தற்காலிக ராணுவத் தளமாக பயன்படுத்தியிருந்தது.
பின்னர் 2000ஆம் ஆண்டு இஸ்ரேல் படைகள் லெபனானிலிருந்து முழுமையாக வெளியேறியபோது, அந்த கோட்டையையும் விட்டு வெளியேறின. தற்போது, 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல் ராணுவம் அங்கு தனது தேசியக் கொடியை ஏற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி நடவடிக்கையாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், போபோர்ட் கோட்டை கைப்பற்றப்பட்ட சம்பவம் பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.