ரொறன்ரோவை உலுக்கிய கொடூர சம்பவத்தில் புதிய திருப்பம்
ரொறன்ரோவில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
ரொறன்ரோ நகரில் அமைந்துள்ள ஒரு சட்டத்துறை நிறுவனத்தில் வைத்தே 29 வயதான ஜூலியா பெர்குசன் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
தற்போது இந்த வழக்கு தொடர்பில் விசாரணையை எதிர்கொண்டு வரும் 33 வயது உஸ்மான் உஸ்மான் என்பவர் மீது, முதலில் தற்செயலாக நடந்த கொலை என கருதி இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டிருந்தது.
விசாரணைக்கு பின்னர், தற்போது திட்டமிட்ட கொலை என தெரிய வந்ததால், இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக உஸ்மான் மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதனால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபணமானால், 25 ஆண்டுகளுக்கு பிணை இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
தொடர்புடைய சம்பவம் செப்டம்பர் 2ம் திகதி மதிய நேரம் ஷெர்போர்ன் தெருவுக்கு அருகாமையில் உள்ள தனியார் சட்டத்துறை நிறுவனம் ஒன்றில் நடந்துள்ளது. திடீரென்று அந்த சட்டத்துறை நிறுவனத்தில் நுழைந்த உஸ்மான், அப்போது வேலையில் மும்முரமாக இருந்த பெர்குசனை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து அவர் மாயமாகியுள்ளார். இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பெர்குசன், மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
கனடாவின் முதன்மை சட்டத்துறை நிறுவனங்களில் ஒன்றான Hicks Adam-ல் நடந்த இச்சம்பவம், முன்னரே திட்டமிடப்பட்டது என்றே அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.