பெண்ணின் விரலைத் துண்டித்து உண்ணக் கட்டாயப்படுத்திய நபருக்கு தண்டனை இரட்டிப்பு
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், ஒரு பெண்ணின் விரலைத் துண்டித்து, அதையே அவரை உண்ணக் கட்டாயப்படுத்திய நபருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் சுமார் இரண்டு மடங்காக உயர்த்தி அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கீழ் நீதிமன்ற நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணின் வலியைச் சரியாகக் கணக்கில் கொள்ளவில்லை எனக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், வடக்கு சதே பகுதியில் வசிக்கும் ஸ்டீபன் ரால்ப் பாட்ஸ் (Stephen Ralph Potts) என்ற நபர், பழங்குடியினப் பெண் ஒருவரைத் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அங்கு எவ்விதத் தூண்டுதலும் இன்றி, அந்தப் பெண்ணின் முகத்தில் சரமாரியாகக் குத்தி எலும்பு முறிவுகளை ஏற்படுத்தியுள்ளார்.

அதன்பின், அந்தப் பெண்ணின் விரல்களை விரிக்கச் சொல்லி, ஒரு விரலைத் துண்டித்துள்ளார்.
அத்துடன் நிற்காமல், துண்டிக்கப்பட்ட அந்த விரலை அந்தப் பெண்ணையே உண்ணுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் மிகுந்த பயங்கரத்தையும், அருவருப்பையும் ஏற்படுத்தியதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி ஜி.ஆர். ஆம்ப்ரோஸ், பாட்ஸிற்கு 4 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதித்திருந்தார்.
ஆனால், தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றம் இத்தண்டனையை 7.5 ஆண்டுகளாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
கீழ் நீதிமன்ற நீதிபதி தனது இளமைக் காலத்தில் தானும் ஒரு விரல் நுனியை இழந்திருப்பதாகவும், அது தனது வாழ்க்கையை பாதிக்கவில்லை என்றும் கூறி, அக்குழந்தையின் விரல் இழப்பு ஒரு "பெரிய ஊனம் அல்ல" எனக் குறிப்பிட்டிருந்தார். இதை மேல்முறையீட்டு நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்தது.
பாதிக்கப்பட்ட பெண் ஒரு "கடினமான வாழ்க்கையை" வாழ்ந்து வந்தவர் என்பதால், இந்தத் தாக்குதல் அவர் வாழ்க்கையை பெரிய அளவில் பாதித்திருக்காது என நீதிபதி கூறியது தவறான கொள்கை என நீதிமன்றம் கூறியது.
தீர்ப்பின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் 'பாதிப்பு அறிக்கை' (Victim Impact Statement) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
அதைத் தேடாமல் நீதிபதி அவசரமாகத் தீர்ப்பளித்தது மிகப்பெரிய தவறு என சுட்டிக்காட்டப்பட்டது.
"பாதிக்கப்பட்டவர் ஒரு பலவீனமான பழங்குடியினப் பெண் என்பதையும், இந்தத் தாக்குதல் அவரது கண்ணியத்தை முற்றிலும் சிதைக்கும் வகையில் இருந்ததையும் கவனிக்கத் தவறியது தவறு" என மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.