மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம் ; இராஜதந்திரம் தொடர்பில் ஆய்வாளர்கள் எச்சரிக்கை
இஸ்ரேல் - ஈரான் மோதலில் இராஜதந்திரம் என்பது ஒருபோதும் உண்மையான திட்டமாக இருக்கவில்லை என மத்திய கிழக்கு ஆய்வாளரும், கத்தாரிலுள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக விரிவுரையாளருமான ஜெய்டன் அல்கினானி தெரிவித்துள்ளார்.
அல்ஜெஸீரா செய்தி சேவைக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போரின் முதல் நாளிலிருந்தே நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள், இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகளை முழுமையாக மூடிவிட்டன.
இந்தச் சூழலால் வளைகுடா நாடுகள் தமது நவீன வரலாற்றில் மிகவும் சவாலான ஒரு காலப்பகுதியை எதிர்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவின் தற்போதைய நகர்வுகள் மிகவும் குறுகிய மற்றும் அரசியல் ரீதியாகத் தூண்டப்பட்ட ஒரு மூலோபாயத்தைக் கொண்டுள்ளன.
இதற்கு நேர்மாறாக, ஈரானின் அரச கட்டமைப்புகளைச் சிதைப்பதிலும், பிராந்தியத்தில் இஸ்ரேலிய செல்வாக்கை விரிவுபடுத்துவதிலும் இஸ்ரேல் முழுமையாகக் கவனம் செலுத்துகிறது.
லெபனானில் ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தனது விரிவாக்க நிகழ்ச்சி நிரலை நியாயப்படுத்தப் பயன்படுத்துவதாக அல்கினானி குறிப்பிடுகிறார்.
ஹிஸ்புல்லா அமைப்பு உள்நாட்டிலும் பிராந்திய ரீதியாகவும் பலவீனமடைந்துள்ள போதிலும், இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் காரணமாக, மக்கள் மத்தியில் அவர்கள் மீதான ஒருவித சமூக அனுதாபம் மீண்டும் உருவாகக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.