இந்தியர்களை வெறுக்கும் நியூயார்க் மேயர்; ட்ரம்பின் மகன் குற்றச்சாட்டு
நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி இந்தியர்களை வெறுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மகன் எரிக் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கிற்கு அண்மையில் நடந்த மேயர் தேர்தலில், 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எரிக் ட்ரம்ப் குற்றச்சாட்டு
இதன்மூலம், நியூயார்க் நகரத்தின் அரசியல் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையைப் பெற்றார்.தேர்தலின் போது, அதிபர் டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் ஜோஹ்ரான் மம்தானி கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி இந்தியர்கள் மற்றும் யூதர்களை வெறுப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் எரிக் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; நியூயார்க் நகருடன் போட்டியிடக் கூடிய அளவுக்கு, உலகில் வேறு எந்த நகரமும் இல்லை.
ஆனால், இந்தியர்கள், யூதர்களை வெறுக்கும், இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒரு கம்யூனிஸ்ட் நபர் இங்குள்ளார்.
பாதுகாப்பான மற்றும சுத்தமான தெருக்கள், நியாயமான வரிகள் போன்றவற்றில் இங்கு தேர்வு செய்யப்பட்ட மேயர் கவனம் செலுத்தினால், அரசின் தலையீடு இல்லாமல் நியூயார்க் நகரம் செழிப்படையும், இவ்வாறு அவர் கூறினார்.