ஒன்டாரியோவில் பள்ளி மாணவியை கடத்த முயற்சி!
வடமேற்கு ஒன்டாரியோவின் லாங்லாக் (Longlac) பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை மர்ம நபர்கள் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஒன்டாரியோ மாகாண போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.
மே 6-ம் திகதி காலை சுமார் 8:45 மணியளவில் 'நிஷ்னாபே மீகெனா' மற்றும் 'பிக்னிக் பாயிண்ட்' சாலை சந்திப்பு பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

'நோட்ரே டேம் டி பாத்திமா' பிரெஞ்சுப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவியை, வெளிர் மஞ்சள் நிற (Beige) காரில் வந்த இரண்டு நபர்கள் அணுகியுள்ளனர்.
காவல்துறையின் அறிக்கையின்படி, காரில் இருந்த ஒரு நபர் கீழே இறங்கி, மாணவியின் கையைப் பிடித்து இழுத்து, அவரை வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ள முயன்றுள்ளார்.
எனினும், அந்த மாணவி சாமர்த்தியமாக அவர்களிடமிருந்து தப்பித்து, பாதுகாப்பாக பள்ளிக்குச் சென்று சேர்ந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட இருவர் குறித்த அடையாளங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க வெள்ளை இனத்தவர் (Caucasian). மெல்லிய வெளிர் நிற முடி கொண்டவர்.சிவப்பு நிற வேலைப்பாடுகள் கொண்ட வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்திருந்தார்.
30 முதல் 40 வயது மதிக்கத்தக்க, உயரமான ஆப்பிரிக்க அமெரிக்கர். கறுப்பு நிற முடி கொண்டவர். முன்புறம் வெள்ளை நிற பூனை படம் போடப்பட்ட கறுப்புச் சட்டை, கறுப்புத் தொப்பி மற்றும் ஒரு பிரவுன் நிற ஸ்வெட்டர் அணிந்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
அறிமுகமில்லாத நபர்கள் உங்களை அணுகும்போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் பிள்ளைகளிடம் 'அந்நியர்களிடம் பழகும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள்' (Stranger Safety) குறித்துப் பேசுங்கள் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.