ஹான்டா வைரஸ்: சொகுசுக் கப்பலில் இருந்து கனடா திரும்பிய பயணிகள்!
உயிர்க்கொல்லி 'ஹான்டா வைரஸ்' பரவல் காரணமாக நடுக்கடலில் தவித்த சொகுசுக் கப்பலில் இருந்த கனடிய பயணிகள் மீட்கப்பட்டு, தற்போது தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஸ்பெயினின் கேனரி தீவுகளில் கப்பலில் இருந்து இறங்கிய அவர்கள், கியூபெக் மாகாணத்தை நோக்கி விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
கியூபெக் சிட்டியிலிருந்து சுமார் இரண்டு மணிநேரத் தொலைவில் உள்ள 'சாகுனே-பாகோட்வில்' விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழுமையான பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து விமானத்தில் ஏறியுள்ளனர்.

'எம்.வி. ஹோண்டியஸ்' என்ற இந்தச் சொகுசுக் கப்பலில் இதுவரை 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கப்பலில் இருந்த மொத்தம் 130 பயணிகளில் 4 பேர் கனடியர்கள் ஆவர். இவர்கள் யாரிடமும் இதுவரை நோய்க்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று கப்பல் நிறுவனமான 'ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ்' தெரிவித்துள்ளது.
பொதுவாக ஹான்டா வைரஸ் எலிகள் மூலம் பரவக்கூடியது. ஆனால், இந்தக் கப்பலில் பரவியிருப்பது அதன் 'ஆண்டிஸ்' என்ற உருமாறிய வகை ஆகும். இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் தன்மை கொண்டது என்பதால் சுகாதாரத் துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் துறைமுகத்திலேயே பயணிகளைப் பரிசோதனை செய்த பின்னரே விமானத்தில் ஏற அனுமதித்தனர், என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்படும் பயணிகள்: வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்கனவே சில கனடியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.