மியான்மரில் சக்திவாய்ந்த வெடிவிபத்து ; 45-க்கும் மேற்பட்டோர் பலி
மியான்மரில் சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்ததில் 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மதியம் நம்காம் நகரில் உள்ள காங்டப் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
சுரங்கப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருள்கள் ஒரு கட்டிடத்தில் பெருமளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென வெடித்ததில் பெரும் பேரழிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பகுதி ஆயுதக் குழுவான டாங் தேசிய விடுதலைப் படையின் (TNLA) கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இது சீன எல்லையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் படையினர் தீவிரமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலியானோரின் உடல்களை மீட்கும் பணியும் தொடர்கிறது.
மேலும், சம்பவ இடத்தை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரங்கப் பணிகள் மற்றும் பாறை உடைக்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருள்கள் முறையற்ற வகையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.