தென்கொரியாவில் வேலைக்கு சென்ற இலங்கையருக்கு ஏற்பட்ட சோகம்: கதறும் மனைவி
தென்கொரிய நாட்டிற்கு வேலைக்குச் சென்ற இலங்கையரை மற்றொரு இலங்கை நபரொருவர் கத்தியால் குத்தி கொலை செய்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 03-12-2023ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பமுனுகம பிரதேசத்தில் வசித்து வந்த பி.கே. ஷெனித் துலாஜ் சத்துரங்க என்ற 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த நபரின் 26 வயதான மனைவி மெலனி வாசனா சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கையில், எனக்கும் சத்துரங்கவுக்கும் 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அவர் ஜப்பானில் இரண்டரை வருடங்கள் பணிபுரிந்தார். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஜப்பானில் இருந்து இலங்கைக்கு வந்தார். அதனால் தான் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி கொரியாவுக்கு வேலைக்குச் சென்றார்.

கொரியாவின் மோப்போ பகுதியில் உள்ள அவரது அறையில் அவருடன் மேலும் இருவர் உள்ளனர். அடுத்த அறையில் மேலும் இருவர் இருந்தனர். அவர்களில் ஒருவர் எப்பொழுதும் குடித்துவிட்டு வந்து சத்துரங்காவிடம் சண்டையிடுவார் என்று அவர் என்னிடம் பலமுறை கூறியிருந்தார்.
அதை அங்கிருந்த ஏஜெண்டிடம் சொல்லியிருந்தார். தங்குவதற்கு பிரச்சனையாக இருக்கிறது, இடத்தை மாற்றி தருமாறு கோரியிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு என்னிடம் பேசும் போது, அடுத்த அறையில் உள்ள அருணா என்ற நபரால் பிரச்சினையாக உள்ளது என கூறினார்.
அப்போது நான் ஏதும் பேசாதே அமைதியாக இரு என சொன்னேன்.

அதன் பிறகு சத்துரங்க உறங்க சென்றுவிட்டார். உறங்கிக் கொண்டிருந்த போது பக்கத்து அறையை சேர்ந்த நபர் வந்து கத்தியால் நெஞ்சில் சரமாரியாக குத்தியுள்ளார். அவருக்கு ஏன் இப்படி நடந்தது என்று நம்ப முடியவில்லை.
இப்போது என் குழந்தையின் உலகமே இருண்டுவிட்டது. நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சென்றிருந்தோம். அப்போதுதான் அந்த நாட்டில் இருந்து சத்துரங்காவை கத்தியால் குத்திய நபர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது என்றார்.