கனடா மீது புதிய வரிகளை விதிக்க டொனால்ட் டிரம்ப் மிரட்டல்!
கனடாவில் நூற்றுக்கணக்கான இடங்களில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் வடக்குப் பகுதி முழுவதும் அடர்ந்த புகைப் போர்வைக்குள் மூழ்கியுள்ள நிலையில், கனடா மீது புதிய வர்த்தக வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
"அமெரிக்கா தேவையின்றி அழுக்கான, மாசுபட்ட மற்றும் ஆரோக்கியமற்ற காற்றால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ள டிரம்ப், கனடாவின் "திட்டமிட்ட அலட்சியம்" காரணமாக இந்த புதிய வரிகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், காடுகள் மற்றும் புதர்களை முறையாகப் பராமரிக்காதது குறித்து விளக்கம் கேட்க கனடா பிரதமர் மார்க் கார்னியை தொடர்பு கொள்ளவிருப்பதாகவும் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

கனடிய காட்டுத்தீ தகவல் அமைப்பின்படி, கனடா முழுவதும் தற்போது 888 இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து வருகிறது. இதில் பெரும்பாலானவை கட்டுப்பாட்டை மீறி எரிகின்றன. ஒன்டாரியோவில் மட்டும் 190-க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.
இந்த காட்டுத்தீயால் இதுவரை சுமார் 30 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் அழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறை கூறுவதை விடுத்து காட்டுத்தீயை அணைக்க ஆதரவையும் உதவிகளையும் அனுப்புங்கள்; அமெரிக்காவில் கலிபோர்னியாவில் தீ விபத்து ஏற்பட்ட போதும், வட கரோலினாவில் சூறாவளி தாக்கிய போதும் கனடா இதே போன்ற உதவிகளைச் செய்துள்ளது" என ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.