எரிபொருள் இறக்குமதியில் சார்பு உலக நாடுகளுக்கு ஆபத்து ; ஐநா எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் ஈரான் போர்ச் சூழலானது, புதைபடிவ எரிபொருட்களை அதிகம் சார்ந்து வாழ்வதால் ஏற்படும் அபாயங்களை உலகுக்கு உணர்த்தியுள்ள ஒரு "கடுமையான பாடம்" என காலநிலை மாற்றம் தொடர்பான ஐநா சபை மாநாட்டின் நிர்வாக செயலாளர் சைமன் ஸ்டீல் வர்ணித்துள்ளார்.
"புதைபடிவ எரிபொருட்களைத் தங்கியிருப்பது ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பையும் இறையாண்மையையும் சிதைத்து, அதனை அடிமைத்தனத்திற்கும் உயரும் செலவுகளுக்கும் இட்டுச் செல்கிறது," என்று ஸ்டீல் எச்சரித்துள்ளார்.

எரிபொருள் தேவைகளுக்காக இறக்குமதிகளைச் சார்ந்து இருப்பது, நுகர்வோரை புவிசார் அரசியல் அதிர்வுகளுக்கும் விலை ஏற்ற இறக்கங்களுக்கும் பலியாக்குகிறது என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஏனைய முக்கிய பொருளாதார நாடுகளை விட ஐரோப்பா புதைபடிவ எரிபொருள் இறக்குமதியையே அதிகம் நம்பியுள்ளது.
இதன் காரணமாகவே, போர் தொடங்கிய இரண்டு வாரங்களுக்குள் ஐரோப்பிய எரிவாயு விலைகள் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் தனது எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தையும், எரிவாயு தேவையில் 80 சதவீதத்தையும் இறக்குமதி செய்கிறது.
2022 ஆம் ஆண்டு ரஷ்யாவுடனான எரிசக்தி நெருக்கடியைத் தொடர்ந்து, தற்போது ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்விலிருந்து நுகர்வோரைக் காக்க அவசர கால நடவடிக்கைகளை ஐரோப்பிய தலைவர்கள் தீவிரமாக வரைந்து வருவதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.