போதைப்பொருள் கடத்திச்சென்ற படகு மீது அமெரிக்கா தாக்குதல் ; 3 பேர் பலி
அமெரிக்கா அரசு, லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியன் பகுதிகளில் இருந்து கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாகக் கூறி அதற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்சிக்கோ, வென்சுலினா உள்ளிட்ட நாடுகளிலிருந்து போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி, கடல் வழியாக வரும் கும்பல்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல்களுக்கு எதிராக அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
இதுவரை இந்த நடவடிக்கைகளில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று கிழக்கு பசுபிக் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தி வந்த படகு ஒன்றை இலக்காகக் கொண்டு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் கடல் வழி போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது.