இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல் மீண்டும் தீவிரம் ; 9 கிராம மக்களுக்கு அவசர எச்சரிக்கை
லெபனானில் போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தாலும், ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, தெற்கு லெபனானில் உள்ள 9 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் இன்று (மே 9) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது.

இதனால் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறி, கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்து குறைந்தது 1,000 மீட்டர் தூரத்தில் உள்ள திறந்த வெளிப்பகுதிகளுக்கு செல்லுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் மாதம் முதல் போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகளும் ஹிஸ்புல்லாவும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 24 மணி நேரத்தில் ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான 85-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பும் அறிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் சமீபத்தில் நடந்த இஸ்ரேல் தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்ததாக லெபனான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.